தல வரலாற்றுச் சுருக்கம்
கலியுகத்திலே கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமான் கோயில் கொண்டருளி எழுந்தருளியுள்ள உகந்தைப் பதியானது இப்பூவுலகிலுள்ள முக்கிய புண்ணிய சேஷ்திரங்களில் ஒன்று. இப்பதியின் பெயர் ஓங்காரநாம ஒலி வடிவு கொண்டது. ஓங்கார தத்துவசக்தியடங்கப் பெற்றது. பிரணவ மந்திர நாம சொரூப ஒலி ஓங்கப் பெற்றது. அருள் ஒலி பேசும் கருணைக் கடலாம் குமரக் கடவுளின் அருள் மகிமை நிறையப் பெற்றது இத்திருவருட் தலம்.
சிவனுக்கும் பிரமனுக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளையே உபதேசித்தருளிய (சுவாமிநாதக் கடவுள்) தலங் கண்ட மகிமைபெற்றது இப்பதி. குமரக் கடவுளே இப்பதியை உவந்து. பெருமானுக்கு உகந்த தலமாகவே இப்பதியின் மலையுச்சியிலே கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பதனால் இம் மலைக்கு உகந்த மலை எனப் பெயர் வந்தது.
இப்பதியிலே ஸ்ரீ வள்ளி தேவியாருக்கும் முருகப்பெருமானுக்கும் திருக்கல்யாணவிழா நடந்தபோது மூவர்களும் தேவர்களும் ஆனந்தித்துக் கொண்டாடிய கல்யாண மங்கள வரலாற்று மகிமையைக் கொண்டது இப்பதி.
சூரபத்மனின் ஆங்கார சக்தியை அழித்து முருகப்பெருமானின் ஓங்காரசக்தி வேலிலிருந்து சிந்திய மூன்று கதிர்களிலிருந்து உருவெடுத்த மூன்று ஓங்கார சத்தி வேல்களிலும் முதன்மை வாய்ந்த அருட்சக்தி நிறைந்த ஓங்கார சக்தி வேலே உகந்தமலை உச்சியிலே தங்கிற்று. இதனால் இப்பதியில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானிற்கு ஒப்பிலா வேலர் என்ற திருநாமமும் உண்டு.
ஓங்காரசக்திவேற் பெருமானின் திருத்தலமாகையால் ஆதியில் இப்பதிக்கு ஓம் கந்தா என்ற பெயர் இருந்து வந்துள்ளது. ஓம் கந்தப்பதியே பிற்காலத்தில் ஓகந்த என திரிபுற்று ஓகந்த என இப்பதியின் பெயர் மருவிற்று. முருகப்பெருமானுக்குரிய திருவுள விருப்பினாலே விரும்பியே பெருமானுக்கு உகந்த இடமாக இந்தத் தலத்திலே கோயில் கொண்டு எழுந்தருளியமையால் இத் திருவருட் தலத்தை அடியவர்கள் உகந்த, உகந்தை என்ற பெயர்களினால் பக்தியோடு அழைத்து வருகின்றனர். ஓம் கந்தா, ஒகந்தா, உகந்த, உகந்தை என்னும் பெயர் நாமங்கள் அடியவர்களின் நாவிலிருந்து ஒலிக்க இறைவனின் திருவருட் கடாட்சமே மூல காரணமாயிற்று.
இப்புண்ணிய சேஷ்திரத்தில் அடங்கப்பெற்றுள்ள திருவருட் சக்தி மகிமையை விழிப்பித்து உணர்த்தும் இறைவனின் திருநாமங்களின் கருத்துக்களை அறிந்து கொள்வோம்...
“ஓம்” பிரணவ மந்திரம், “கந்தா” இறைவனைக் குறிக்கின்றது. நாம் அகந்தை, அகந்த என்னும் சொற்களின் எதிர்ப்பாலான சொற்களை அறிந்து கொள்வோம். அகந்த - உகந்த, ௮௧ந்தை - உகந்தை. அகந்த-அகந்தை என்னும் சொற்கள் ஆங்காரம் எனப் பொருள்படும். உகந்த-உகந்தை என்னும் சொற்கள் ஓங்காரமென்னும் பொருள்படும். ஓகந்தா என்னும் நாமத்தில் ஓம் பிரணவ சொரூப வடிவ ஒலியுடன் சேர்ந்து கந்தா என்னும் இறைநாம ஒலியுடன் சேர்ந்து ஒலித்து ஓகந்த என திரிபுற்று மருவினாலும் இறை திருநாம ஒலியுடன் கூடிய பிரணவ மகா மந்திர சக்தியின் ஒலி வடிவமே வெளிப்பட்டு நிற்கின்றது. ஓம் கந்தா, ஓகந்த, உகந்த, உகந்தை என்னும் நாமங்கள் நான்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ஒரே கருத்தைக் கொண்டு பிரணவ மந்திர சக்தியை ஒலித்து இறையருள் பெருக்கும் திருநாம தத்துவ வடிவங்களே.
ஓம்கந்தா, ஓகந்த. உகந்த, உகந்தை என இப்பதியின் நாமங்கள் வெவ்வேறு ஒலி வடிவமான நான்கு பெயர்களைக் கொண்டிருந்தபோதிலும் ஒரே பிரணவ மந்திர ஒலியின் பொருளையே தொனித்துக் கொண்டுள்ளது. இது மகாமந்திரமான பிரணவ மந்திர ஒலிநாதமே உகந்தைப் பதியின் திருநாமமென ஆன்மீக உலகிற்கு நிரூபணமாக்கிக் கொண்டுள்ளது. எனவே இப்பதியிலே ஓங்கார சக்தி பூரணமாக அடங்கப்பெற்று இறைவனின் அருள், கருணை அலைமோதும் இறை கிருபையும் இறைதொடர்பும், இறைவனின் அருளாட்சி நிலை கொண்ட இறைசாந்தி நிலையமாகவே இப்பதி உணரப்பட்டு கருதப்பட்டு வருகின்றது.
இப்பதியின் நாமங்கள் நான்கு ஒலிவடிவ நாம தத்துவங்களாகப் பிரிந்து ஒலித்துக்கொண்டு இருந்தாலும் இப்பதியின் நாற் திசையிலும் ஓங்கார நாம தத்துவப் பொருள் ஒலிவீசி குமரக்கடவுளின் திருவருள் மகிமையின் அருளொளி வீசி ஐயனின் அருள் மகிமையே ஓங்கி நிற்கும் இறைவனின்அதிஅற்புத நிலையை இங்கு காணலாம். இவ்வற்புத அருட்தத்துவம் உலகில் எந்தவொரு புண்ணிய ஷேத்திரத்திலுமில்லாத ஓர் இறை மகத்துவமாகும். அருள் வள்ளலாம் திருமுருகப்பெருமானின் அருட்கொடை மகிமைக்கும் இனி வேறு சான்று உண்டோ என்க.
பிரணவ மகா மந்திர சக்தியே தன் பதியின் திருநாமமாகக் கொண்டு அத்திருநாமமே அடியவர்களின் நாவில் சதா எழச்செய்து அம்மகா மந்திரமே
ஒலிக்கப்பெற்று பல்லாண்டு காலமும் ஒலித்து சக்தி உருப்பெற்றது இப்பதி. ஓங்கார சக்தி நாதம் உருப்பெற்று வலுப்பெற்று ஓங்கிய ஒலிஅலைகள் அலைமோதிப்பரவி மண்ணிலும் விண்ணிலும் அதிர வானமண்டலத்திலே இவ்ஒலிகள் சூக்குமநிலையில் எமது செவிப்புலன்களுக்கு அப்பால் ஒலிப்பதிவுகளாகி பெருகிய வண்ணமே இப்பதியின் சக்தி ஓங்கார சக்தியினால் மிகவும் உருப்பெற்று மிகவும் சக்திவாய்ந்த அருட்தலமாக உலகிலே சிறந்து விளங்குகின்றது. இவ்வரிய மகா மந்திர சக்தியினை தேவுக்களினதும் மூவுக்களினதும் அனைத்து தெய்வங்களினதும் முருகப்பெருமானினதும் மிக்க கிருபையும் கருணாகடாட்சமும். நிறைத்த இப்புண்ணிய தலத்திலோதான் முருகப்பெருமானின் ஓங்கார சக்திவேலின் அருட்சக்தி மிகுந்த முதன்மையான வேலுருக்கொண்டு உகந்தைமலை உச்சியிலே தங்கி அருளாட்சி செய்து ஒப்பிலா வேலவர் என்னும் திருநாமத்துடன் முருகப்பெருமான் எழுந்தருளி அடியவர்களின் குறைதீர்த்து கருணாகடாட்சம் செய்தருள்கின்றார். படைத்தற் கடவுளாகிய பிரமதேவருக்கே பிரணவமந்திர ரகசிய தத்துவத்தின் உட்பொருள், மெய்பொருள் உபதேசமருளிய நம் குமரக்கடவுளாரின் ஓங்காரசக்திவேலின்
அருட்சக்தி ஓங்கி தரித்துநின்றதும் முருகப்பெருமான் தனக்கு உகந்த தலமாக கோயில் கொண்டருளியதும் இம்மகாமந்திர நாம ஒலிபடைத்த இப்பதியின் திருநாம தத்துவமகிமையினால் போலும்.
பிரணவ மகாமந்திர சக்தி ஒலிஒளிபெறும் இப்புண்ணிய தலத்தில் திருமுருகப்பெருமானின் திருவருள் ஒளி அலை அருள் வீசி மோதியவண்ணமேயுள்ளது. இத்திருத்தலத்திலே நாம் இறைதிருவடிகளில் முழுச்சரணாகதி அடைந்த நிலையில் தூய அன்புடன் ஒரே மனநிலையில் முருகப்பெருமானை மனமுருகி மனம் இறுகி வழிபட்டு வர அவனருளால் அனைத்து வினைகளும் மும்மலக்குற்றங்களும் ஐவிருள் அதிகாரமும் அதன் ஆகோரமும் ஆங்காரமும் சூரியனைக் கண்ட பனிபோல நிச்சயமாக நீங்கி மறையும். கலியுகவரதனாம் நம்முருகப்பெருமான் இருண்டயுகமாகி. இரும்பு யுகமாகிய கலியுகத்து இருளில் மருள்சேர்ந்து அலையும் ஆன்மாக்களின் பால் கருணைகொண்டு திருநோக்கமுற்று அருள் ஒளிகாட்டி அடியவர்களை இப்பதியிலே அரவணைத்து ஆட்கொள்ள கருணைகாட்டும் அதன் ஒளிபேசும் திருவருளும் குருவருளும் நிறைந்து விளங்குவது உகந்தைப்பதியே எனவும் இப்புண்ணிய தலத்தின் அருள்மகிமை என்றும் வற்றாத அருட்கடலாகவும் உள்ளதே இப்புனிதப்பதியின் தத்துவ உண்மைகாட்டும் விளக்கம் என்க.
உகந்தது என்பதன் அர்த்தம் பொருந்தியது, இசைந்தது, பொருத்தமானது என பொருள் கொள்ளும். ஆன்மீக தத்துவத்தின்படி நாம் நமக்கும், பிறருக்கும் உலகத்திற்கும் இறைவனுக்கும் பொருந்திய வழியில் அல்லது உகந்த வழியில் ஆன்மீக நெறி நின்று வாழ்வதன் மூலமே இறையருளையும் இறை தொடர்பையும் குருவருளையும் நாம் பெற்று இறை திருவடிகளை நாம் சென்று அடையமுடியுமென்பதாகும்.
உகந்த என்றால் இசைந்த அல்லது பொருந்த எனப் பொருள்படும் என அறிந்தோம். உடலுக்கு ஒவ்வாமை வரும் போது உடல் தடிக்கும். இதை ஆங்கிலத்தின் வைத்தியர்கள் அலேர்ஜிக் என்று கூறுவார்கள். அதாவது ஒவ்வாமை என்பது. இது உண்ணும் உணவினாலோ வேறு விதத்திலோ ஒரும் நோய். ஆனால் எமக்கும் பிறருக்கும் உலகத்திற்கும் இறைவனுக்கும் ஓடையில் தனித்தனியாக வேறுபடுத்திப் பிரித்துத் தனித்து வைக்கும் மகா கொடிய ஒவ்வாமை நோய் கர்வம் அலலது ஆணவம் என்னும் ஒவ்வாமையே எம்மையும் பிறரையும் உலகையும் இறைவனையும் பிரித்தாளும் தீராவினை இருளாக இருந்து எம்மை வருத்தி வருகின்றது.
எம்மில் உள்ள ஆங்காரசக்தி முற்றாக நீங்கிய நிலையிலே நமது ஆன்மா நிர்மல நிலையான ஓம்கார சக்தியைப் பெறுகின்றது. இதுவே பரப்பிரம்ம தத்துவம். எம்மையும் இறைவனையும் பிறரையும் உலகையும் பிரித்தாளும்
சக்தி ஐவிருளினால் வந்த மும்மல இருள்களுக்கு உண்டு. ஆணவமே அனைத்து மல உற்பத்திக்கும் மூல ஆணிவேர்.
ஆசை, சந்தேகம், கோபம், கர்வம், அடங்காமை. அவசரம், ஆத்திரம், கோத்திரம் யாவும் ஆணவ மலத்தின் குணவியல்புகளே. சந்தேகம் சந்தோசக்கேடு . நாம் எதிலும் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்வதிலும் சந்தேக மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதிலும் அவ்வாறு வாழ்வதற்கும் காரணமாகி இறுதியிலே ஒருத்தரை ஒருத்தர் வெறுத்துப் பிரிந்து இறைவனையும் வெறுத்து உலக ஆசாபாசங்களில் மூழ்கித் திளைத்து மயங்கிப் போய் பேய் வாழ்வுக்கு ஆளாவதும் இம் மும்மலங்களின் சக்தியின் ஆளுமையும் ஆட்சியுமே ஆகும்.
உயிர்களும் உலகமும் இறைவனும் பிரிந்து உயிர்கள் வாழ அபிப்பிராய பேதமே மூலகாரணமாகும். இம் மலங்களின் ஆட்சியிலும் ஆளுமையிலும் இருந்து நமது ஆன்மா சுதந்திரமடைய உகந்தப்பதியானை நம்புங்கள். அவன் மீது தூய அன்புடன் பூரண சரணாகதி அடையுங்கள். அவனையும் அவன் பதியையும் சதா நினைவிற் கொள்ளுங்கள். அவன் பதியை நாடுங்கள். அவனை வழிபடுங்கள். மும்மலக் கொடுமைகளின் அடிமைத் தனத்திலிருந்து விடுபடுங்கள். ஐயனின் அருளுக்கும் கருணைக்கும் நிச்சயம் ஆளாவீர்கள். இந்த யுகத்திலே யுகயுகாதீரன் கலியுகக் கடவுளாம் கண்கண்ட தெய்வமான முருகப்பொருமானின் அருள் விளையாடலும் திருவிளையாடலும் சதா நிகழும் இப்பதியிலே குமரப்பெருமானின் குருவருட் சக்தியின் துணைகொண்டே தமது ஆத்மா சாந்தியடைய முடியும். இதுவே உண்மை விளக்கம். இதுவே உகந்தப்பதியின் தத்துவமுமாகும்.


வழியமைத்து ஆலய அபிசேகமும்செய்து ஆறுகாலப் பூசையுமியற்றி இராவணேஸ்வரன் பெயரில் தீபமுமிட்டு இறைபணி செய்து வழிபட்டூ வந்தனன் என்பதும் வரலாறு காட்டும் உண்மைகளாகும். எனவே இப்பதியில்
மும்முர்த்திகளின் அருளும் கருணாகடாட்சமும் பெற்று மகிமை பெருகுவதுடன் அட்டதிக்குப் பாலகர்களின் கருணையருள் ஒளியும் பெற்ற தென்கயிலாசத்தின் கருவறையாக இப்பதி அடியவர்களினால் போற்றப்பட்டும் வழிபாடு செய்யப்பட்டும் வருகின்றது.
உசாத்துணை நூல்கள்:
உசாத்துணை நூல்கள்:
1.மட்டக்களப்பு மான்மியம்
2.மட்டக்களப்புத் தமிழகம்
3.கதிர்காமப் பிரபந்தங்கள்.
full-width