அழகியற் கற்கைகள் நிறுவகத்தில்,ஓவியம் மற்றும் மரச்செதுக்கல் காட்சிக்கூடம்.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நிறுவகப் பணிப்பாளர் சி.ஜெயசங்கரின் கருத்தாக்கத்திலும் நெறிப்படுத்தலிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்புல தொழில்நுட்பத் துறையினரின் ஓவியம் மற்றும் மரச்செதுக்கல் வேலைப்பாடுகளின் காட்சிக்கூடம் நிறுவகப் பணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்டது.

விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத் தொழிநுட்பத் துறை மாணவர்கள் உருவாக்கிய கலையாக்கங்களே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படைப்பாக்கங்களின் தரம், படைப்பாக்க ஒழுங்குபடுத்தல், காட்சிப்படுத்தல் என்பன மாணவர்களின் படைப்பாக்க ஆளுமையினையும் நுட்பத் திறனையும் வெளிப்படுத்துவதுடன் மாணவர்களின் கலைத்திறன் வளர்ச்சியினையும் சுட்டுவதாகவுள்ளது.

ஓவியர்களான வே.கோகுலரமணன், பி.புஸ்பகாந்தன், அ.அருள்சஞ்சித் மற்றும் வருகை விரிவுரையாளர் சுசிமன் நிர்மலவாசன் ஆகியோரின் பங்களிப்புடன் கலைப்பொருட்களின் காட்சிக்கூடம் இடம்பெற்று வருகிறது. இக்காட்சிக்கூடம் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களதும் விரிவுரையாளர்களதும் கலையாக்க காட்சிப்படுத்தல்கள் இம்முறை மட்டக்களப்பு மாமாங்க ஆலயத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நிரந்தர மற்றும் நடமாடும் காட்சிக்கூடங்களாக மற்றும் விற்பனை கூடங்களாகவும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன என்றும் வருடாந்த நடைமுறையாகவும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது என நிறுவகப் பணிப்பாளர் இதன் போது தெரிவித்தார்.

 -பா.மோகனதாஸ்-